Ellam Umathe Kavithai எல்லாம் உமதே – டாக்டர் . கவிஞர். அபூபக்கர்


இலங்கையின் கிழக்கு மாகாணத்திலே சாய்ந்தமருதில் 1945ம் ஆண்டு ஆதம்பாவா கதீஜாஉம்மா ஆகியோரின் புதல்வனே கவிஞர் அபூபக்கர் ஆவார். இவர் வைத்தியராகப் பணியாற்றியவர். இளம் வயது முதலாக இலக்கியத்தில் நாட்டமும் பரீட்சையமும் உடையவர். அறிவியல், இலக்கியம், விஞ்ஞானம், சமயம் மற்றும் பல்துறை சார்;ந்த அறிவுடன் பல படைப்புக்களை வெளியிட்டுள்ளார். அறிவரலை, பொய்கை முதலான பெயர்களில் சஞ்சிகை வெளியிட்டுள்ளார். இவர் எழுதிய 'அறிவியல் வளர்த்த முஸ்லிம்கள்' என்ற நூலுக்கு சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்தமை. இவரது அறிவியல் முதிர்ச்சிக்கு எடுத்துக்காட்டாகும். இவர் இஸ்லாமிய கலைக் களஞ்சியம் எனும் நூலை 40 தொகுதிகளாக வெளியிட்டுள்ளார். நான், நம்பிக்கை மணிகள், நீ முதலான கவிதைத் தொகுப்புக்களையும் வெளியிட்டுள்ளார். இவரது ஆக்கங்களில் சில மருதூர் கையும், டாக்டர் அகர் போன்ற பெயர்களிலும் வெளியிட்டுள்ளார். 

உழுதுவாழ்வோன் உணவின்றி
உடலும் சோர்ந்து துடிக்கின்றான்
அழுது வடித்த கண்ணீரை
அருந்தி நெஞ்சம் கவல்கின்றான்
கொழுத்த செல்வன் உழைப்பவனின்
குருதி குடித்து மகிழ்கின்றான்
பழுத்த அவனின் பெருவயிறு
பானையாகச் சிரிக்கிறது

ஆடை நெய்வோன் துண்டேனும்
அணிந்து கொள்ள வழியின்றிக்
கோடையோடும் குளிரோடும்
கோரச் சண்டை தொடுக்கின்றான்
மூடை வயிற்றுப் பெருஞ்செல்வன்
மூக்கு முட்ட உண்ட பின்னர்
கேடில் பட்டுத் துணியாலே
கையைத் துடைத்து மகிழ்கின்றான்

சேற்று மண்ணில் காலூன்றிச்
செய்ய உண்டி பலசெய்த
ஆற்றல் மிகுந்த தொழிலாளி
ஆன்ம நொந்து தவிக்கின்றான்
போற்ற அவனை யாருமில்லை
புரிய எவனும் இங்கில்லை
வேற்று மனிதன் அவனுயிரை 
விழுங்கி ஏப்பம் விடுகின்றான்
சோடையுற்ற சொறிநாயாய்
சோம்பி நின்றது போதுமடா
பாடை ஏறிச் செல்லுமுன்னே
பானை வயிற்றுச் சீமானை
ஆடையின்றி அணியின்றி
அருந்தி மகிழ உணவின்றி
காடாக்கினியில் தள்ளிவிடக்
கரங்கள் கோர்த்தே எழுங்களடா

நோக்கம் இல்லாச் சீமான்கள்
நொந்து படையா வாழ்வுக்கோர்
ஆக்கம் செய்த கைகளினால்
அழிவு செய்ய எழுங்களடா
தாக்கமுற்ற இதயங்கள்
தீயாய் ஓங்கி அவர் வாழ்வைத்
தாக்கி மண்ணில் சாம்பரெனத்
தள்ளி விட்டே மலரட்டும்

கல்லை உடைத்து நெடுஞ்சாலை
கண்ட கைகள் சீமானின்
பல்லை உடைத்து வளர்கின்ற
பயிருக்கு எருவாய் போடட்டும்
நெல்லைக் கொண்ட அவர் மனையை
நெருப்பில் இட்டுக் கொழுத்தட்டும்
எல்லாம் உமதே நீரேதான்
இந்தப் புவியின் எசமானர்

 

Post a Comment

0 Comments